பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.. வட இந்தியாவில் மோடி அலையை காணவில்லை.. திருமாவளவன் பேட்டி!
சிதம்பரம் : ராமர் கோயில் அரசியல் எடுபடவில்லை என்றும், உத்தரப் பிரதேச மக்கள் பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும், மற்றவை 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சியே மத்தியில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விசிக தலைவருமான திருமாவளவன் சுமார் 3 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். கிட்டத்தட்ட சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனின் வெற்றிக்கு உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், எப்படி இருந்தாலும், பாஜகவால் தனிப்பெரும்பாம்பை பெற முடியாதது மிகப்பெரிய சரிவு.
மோடி அலை என்பது உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இன்னும் பல சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டியுள்ளது. இதனால் தற்போதைய நிலவரத்தை வைத்து மட்டும் எதையும் சொல்லிட முடியாது. இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளது.
வழக்கமாக உத்தரப் பிரதேசத்தை வைத்து தான் அரசியல் காய்கள் நகர்த்தப்படும். உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராமர் கோவில் அரசியல், அதனையொட்டி முன்னெடுக்கப்பட்ட அரசியல் வெற்றிபெறவில்லை. அங்கேயே பாதிக்கு பாதி இடங்களை பறிகொடுத்துள்ளார்கள்.
காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இது உத்தரப் பிரதேச மக்கள் பாஜகவுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி. அமேதியில் ஸ்மிரிதி இரானியும் தோல்வியடைந்துள்ளார். இப்படி பல தலைகள் பாஜகவில் உருளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த வெற்றியை கொடுத்த இந்திய மக்கள் இந்தியா கூட்டணி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications