மக்களவை தேர்தல் முடிவில் அதிமுக அரசின் செயல்பாடு தெரிந்துவிடும்: ஜி.கே. வாசன்
இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும். மத்திய அரசு கொடுத்து வந்த அழுத்தத்தால் தான் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து அதில் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான முடிவு கிடைத்துள்ளது.
அங்கு தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்றால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் உடனே வெளியேற வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை படையால் தாக்கப்படும் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகவும், மீன் பிடித்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஆராய்ந்தும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகே மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை துவங்கியது. ஆனால் பலரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் அவசியமானது.
மக்களின் உணர்வுகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டுமே. கட்டாயக் கல்வி சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நலனை பாதுகாக்கும் கட்சியே காங்கிரஸ்.
மத்தியில் 2வது மற்றும் 3வது அணிகள் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் முதல் அணி காங்கிரஸ் அணி தான். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பேசி வருகிறார். அதன்படி தான் திருச்சிக்கும் வந்தார்.
தமிழக அரசின் செயல்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை மாநில அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.