இயந்திரக் கோளாறால் லண்டன் செல்லும் விமானம் ரத்து... சென்னையில் தவிக்கும் பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதன் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் நேற்று அதிகாலை 5.35 மணிக்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான பிஏ-36 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த 150 பயணிகள், விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.
அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. கோளாறு சரி செய்ய தாமதம் ஆனதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு இந்த விமானம் புறப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.