சென்னையில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு- நீண்ட வரிசையில் பலமணிநேரம் பொதுமக்கள் காத்திருப்பு!!
சென்னை: வெள்ளம் மூழ்கிய சென்னை நகரில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்குகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பேய்மழை வெள்ளம், ஆறுகளின் வெள்ளம் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிட்டது. சென்னை நகரமே பல தீவுகளாக துண்டாடப்பட்டுவிட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவு இல்லாததால் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதுபோன்ற சரக்குகள் இல்லாததால் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளும் பெருமளவில் இயக்கப்படவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படவில்லை. கைவசம் இருப்பு உள்ள பெட்ரோல், டீசல்களை கொண்டு இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் அனைத்தும் சீக்கிரமாகவே மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் முன்பு "நோ ஸ்டாக்" போர்டுதான் தொங்குகிறது. பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட்ட ஒரு சில பங்குகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டு செல்லும் நிலைமைதான் நீடிக்கிறது.
இதேபோல் சென்னை நகரில் சமையல் எரிவாயு விநியோகமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications