தொடரும் கந்துவட்டி டார்ச்சர்.. ஈரோடு அருகே லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கந்துவட்டி கொடுமை காரணமாக லாரி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு: கந்து வட்டி கொடுமை காரணமாக ஈரோட்டில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கந்துவட்டி கொடுமைக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு குடும்பமே பலியாகியும், கந்துவட்டி கொடுமை தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டாரின் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஈரோடிலும் கந்துவட்டி டார்ச்சர் தாங்காமல் ஒருவர் மனமுடைந்து தற்கொலையில் செய்துகொண்டார்.

சோலார் அடுத்த நகராட்சி நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் லாரி உரிமையாளராக உள்ளார். ஒரு நிதி நிறுவனத்திடம் ரூ.5 லட்சம் கடன் கேட்டுள்ளார். தட்சணாமூர்த்தியிடம் லாரி உள்ளதால், நிதி நிறுவனமும் அவர்கேட்ட தொகையை கடனாக வழங்கியது. ஆனால் வாங்கிய ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக வட்டி தர வேண்டும் என்று நிதி நிறுவனத்தினர் தட்சணாமூர்த்தியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் வட்டி பணத்துக்காக அவரை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவரிடமிருந்த 2 லாரிகளையும் எடுத்து சென்றது. இதனால் லாரியை வைத்தே பிழைப்பு நடத்தி வரும் தட்சணாமூர்த்தி, கடும் அதிர்ச்சியடைந்தார்.
லாரிகள் போய்விட்டதே என்ற மன வருத்தத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி யாரிடமும் சரிவர பேசாமலும், சாப்பிடாமலும் இருந்துள்ளார். இந்நிலையில் தட்சணாமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நிதி நிறுவனத்தாரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications