பண்ணை வீட்டில் பயங்கரம்.. கழுத்தறுக்கப்பட்ட காதல் தம்பதி.. திருச்சியில் ஷாக்
திருச்சி: திருச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, தோட்டத்து வீட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஜோடியை வெட்டிக்கொன்றது யார் என்பது தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை.

நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார்,வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் இயந்திரத்தை வைத்து பணிகளை செய்து வரும் ராஜ்குமார், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார். விஜயசேகரனின் தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. ராஜ்குமார் அந்த வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகியோர் பி.மேட்டூர் பகுதியில் வைக்கோல் சுற்றும் பணிக்கு சென்று வந்துள்ளார்கள். வேலைக்கு சென்று வந்த பின்னர் தம்பதி இருவரும் தோட்டத்து வீட்டில் வழக்கம் போல் தூங்கினர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் விஜயசேகரன் தோட்டத்து வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இரட்டை கொலை: அப்போது, ராஜ்குமாரும், சாரதாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரட்டை கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கொலை எப்படி நடந்தது? போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.. ராஜ்குமாரும் சாரதாவும் தோட்டத்து வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியால் அவர்களது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள். ஆனால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் போலீசாருக்கு தெரியவரவில்லை.

போலீஸ் விசாரணை: இந்நிலையில் உப்பிலியபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். கொடுக்கல்-வாங்கல், முன்விரோதம், நிலப்பிரச்சினை, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சி: மேலும் தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போலீசார், அதில் உள்ள சந்தேக நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர். காதல் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications