வலுவிழந்தது தாழ்வு நிலை... தொடர் மழைக்கு முற்றுப்புள்ளி ... குமரி, தூத்துக்குடியில் மட்டும் பெய்யும்
சென்னை: குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெய்து வந்த மழை ஓய்ந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் புரட்டிப் போட்டு வந்தது கன மழை. இதன் காரணமாக சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. கடலூர் சின்னாபின்னமாகிப் போனது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் சற்று முன்பு பேசுகையில், வங்கக் கடலில் குமரிக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று வலுவிழந்து விட்டது.
இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை ஓயும். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். கிழக்கிலிருந்து வரும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இங்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
இவை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. கன மழைக்கும் வாய்ப்பில்லை.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 4 செமீ மழை பெய்திருந்தது என்றார் பாலச்சந்திரன்.
இந்த அறிவிப்பின் மூலம் தொடர் மழையால் ஊறிப் போய்க் கிடக்கும் தமிழகத்திற்கு மழையிலிருந்து ஒரு ஓய்வு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications