கொளுத்தும் வெயில்.. குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவு.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை: வெயில் கொளுத்தி வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. துவக்கத்தில் சாரலாகவும், பின்னர் தூறலாகவும் பெய்த மழை அதன் பிறகு போக்கு காட்டிவிட்டது.

இதனால் தென்காசி, குற்றாலம் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. விலை நிலங்களில் பயிர் செய்திருந்த பெரும்பாலான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி விட்டன. விவசாயம் சரியாக இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடமாவட்டங்களில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து கொட்டும் நீரில் தலையை நனைத்துவிட்டு செல்வது வழக்கம். பொதுவாக ஜனவரி மாதம் மகர ஜோதி வரை குற்றாலத்தில் ஓரளவிற்கு தண்ணீர் விழும். ஆனால் நடப்பாண்டில் டிசம்பர் மாத தொடக்கம் வரை சரியாக மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து போய் விட்டது. மேலும், கோடை போல் இந்தப் பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் அருவியில் பாறையை ஒட்டியே தண்ணீர் விழுகிறது. அந்த நீரில்தான் ஐயப்ப பக்தர்கள் தலையை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் பெய்து வருகிறது. இது தொடர்ந்தால் ஓரளவுக்கு தாக்கு பிடிக்கலாம் என்கின்றனர் இப்பகுதிவாசிகள்.












Click it and Unblock the Notifications