பெட்ரோல், டீசல் விலையை போலவே, 'நைசாக' உயர்த்தப்பட்ட காஸ் சிலிண்டர் விலை!
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வை கண்டு வருகிறது.
சென்னை : வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரே நாளில் ரூ. 1.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்றே சொல்லலாம்.
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தலாம் எனவும் ராஜ்யசபாவில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
அக்டோபர் 1 முதல் விலை உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 1.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. விமான எரிபொருள் விலையும் 6% வரை உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. மானியத்தை குறைக்கும் வகையில் தொடர்ந்து 5-வது மாதமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வாட்டும் விலை உயர்வு
இதன்படி செப்டம்பர் மாத இறுதியில் ரூ. 609 ஆக இருந்த மானியம் அல்லாத சிலிண்டரின் விலை அக்டோபர் 1 முதல் ரூ. 656.50 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலையானது ரூ. 476.78லிருந்து ரூ. 479.10 ஆக அதிகரித்துள்ளது.
3 மாதத்தில் 123 ரூபாய் உயர்வு
கடந்த 3 மாதங்களைப் பொறுத்த மட்டில் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 123.50 அதிகரித்துள்ளது. இதே போன்று மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை 5 மாதங்களில் ரூ. 51 வரை உயர்ந்துள்ளது.
நுகர்வோர் எண்ணிக்கை
நாடு முழுவதும் 18.11 கோடி நுகர்வோர் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதே போன்று 2.66 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.