இல்லத்தரசிகளுக்கு ஓர் நற்செய்தி... எல்பிஜி டேங்கர் லாரிகள் போராட்டம் வாபஸ்
சமையல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாமக்கல்: சமையல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
மாநில அளவில் டெண்டர் வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எரிவாயு எடுத்து செல்ல மண்டல வாரியாக ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரியும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
14 லட்சம் சிலிண்டர்கள்
4,500 டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்து செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 14 லட்சம் சிலிண்டர்கள் நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் பேச்சுவார்த்தை
கடந்த 13-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களுடன் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. மேலும் டெண்டர் தொடர்பாகவும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன.
வாபஸ் பெற முடிவு
இதையடுத்து நாமக்கல்லில் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் கூடியது. அதில் எண்ணெய் நிறுவனங்களின் பேச்சுவார்த்தையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
சிலிண்டர் தட்டுப்பாடு
அதன்படி கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த லாரி உரிமையாளர்கள் இன்று வாபஸ் பெற்றுக் கொண்டனர். இந்த ஸ்டிரைக் மேலும் நீடித்திருந்தால் 4 மாநிலங்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.