தேர்தல் தேதியும் வந்துருச்சு.. அதிமுக அழைப்பு வரலையே. கதறலில் காம்ரேடுகள்!
சென்னை: அதிமுகவின் சூறாவளி பிரசாரம் செய்கின்றனர்.. தேர்தல் ஆணையம் தேதியையும் அறிவித்துவிட்டது.. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு எப்பதான் அழைப்பு வருமோ? என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் தமிழக இடதுசாரிக் கட்சிகள்.
லோக்சபா தேர்தலில் இதர கட்சிகளின் கூட்டணிகள் முடிவாகும் முன்பே அதிமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விறுவிறுவென இணைந்தன. அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக்குழு அமைத்தது.
இடதுசாரித் தலைவர்களும் அதிமுக தலைமைக் கழகத்துக்குப் போய் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு இத்தனை சீட் வேண்டும் என்று டிமாண்ட் செய்துவிட்டு வந்தனர். அதோடு சரி.. அதற்கு பின்னர் அதிமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரலை.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம்..
இதன் உச்சமாக 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. அதிரடியாக தேர்தல் பிரசாரத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இடதுசாரிகளுக்கு இன்னமும் அழைப்பு போகவில்லை.
எத்தனை குழப்பங்கள்?
இதனால் அதிமுக கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? தொகுதிகள் ஏதேனும் கிடைக்குமா? கிடைக்காது? கழற்றிவிடுவார்களா? தனித்து போட்டியிடனுமா? திமுகவுடன் போகனுமா? என ஏகப்பட்ட குழப்பங்களுடன் இடதுசாரிக் கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.
8 கேட்ட இடதுகள்
அதிமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுமே தலா 4 தொகுதிகள் வீதம் 8 தொகுதிகளைக் கேட்டிருக்கின்றன. ஆனால் அதிமுகவோ 2 கட்சிகளுக்குமே சேர்த்து 3 அல்லது 4 தான் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது. இதில் இருந்து பின்வாங்கும் நிலையிலும் அதிமுக இல்லை.
விரக்தியில்..
இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் இடதுசாரிகள், அதிமுகவின் தேர்தல் பிரசார கூட்டங்கள் பக்கம் எட்டிக் கூட பார்க்காமல் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சென்னையில் கூடிக் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நெருக்கடியில் இடதுசாரிகள்
ஆனாலும் அதிமுக கண்டுகொள்வதாக தெரியவில்லை. தற்போது வரை அதிமுகவிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வராத நிலையில் அடுத்த கட்ட முடிவு எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றனர் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள்!