விடுதலைப் புலி ஆதரவாளர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என தமிழக அரசு கூறவில்லை: ஓ.பி.எஸ்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறவில்லை என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று இடைக்கால மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.
உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசால் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை தாக்கல் செய்திட முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1.7.2015 அன்று ஒரு கூடுதல் ஆணை உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.

புலிகள் மீது குற்றம் சொல்லலை
இது தொடர்பாக, அதனை திரித்து தமிழக அரசின் மீது குற்றம் கூறும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். கருணாநிதியின் கருத்துகளை ஒட்டியே வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை.

விளக்கம் கேட்ட முதல்வர்
எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், தமிழ்நாடு முதல்வர் இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்கள்.

மத்திய அரசு அறிக்கை
அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு Let, Jem,நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும் அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

புலிகளால் ஆபத்து இல்லை
மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதிலும் கூட விடுதலைப் புலிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், இது குறித்து தேவையற்ற விவாதமும், மனச் கசப்பும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ஜெயலலிதா அரசின் மீது வீண் பழியும் சுமத்தப்படுவதால், தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யும் தமிழகம்
இந்த கூடுதல் மனுவில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அச்சுறுத்தல் பற்றி அதனுடைய அறிக்கையில் பத்தி 4ல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில், 4.1 முதல் 4.3 மற்றும், 4.5 முதல் 4.8 வரையிலான மதிப்பீடுகள் மட்டும் தமிழக அரசிற்கு ஏற்புடையது என்றும், விடுதலைப் புலிகள் குறித்து பத்தி 4.4ல் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை இந்தக் கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த அறிவுறுத்தலின்படி உச்சநீதி மன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்












Click it and Unblock the Notifications