ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தடையை நீக்க கோரும் பிரசாரத்தை தொடங்கும் விடுதலைப் புலிகள்
இந்தியாவில் தங்களது இயக்கம் மீதான தடையை நீக்க கோரும் பிரசாரத்தை தொடங்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் தடையை நீக்கக் கோரி பிரசாரத்தை தொடங்க விடுதலைப் புலிகள் வியூகம் வகுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த தடையை நீக்குவது தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் ஐரோப்பிய யூனியன் கருத்து கேட்டிருந்தது.
தடை நீங்குகிறது
இருநாடுகளுமே தடையை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி இரு இயக்கங்கள் மீதான தடையை நீக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
முதல் வெற்றி
அப்படி அதிகாரப்பூர்வமாக தடை நீக்கப்பட்டால் 2009-ம் ஆண்டு யுத்த தோல்விக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்திருக்கும் முதலாவது ராஜதந்திர வெற்றியாகும். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்துகள் அனைத்தும் மீட்கப்படும்; விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக பயணம் மேற்கொள்ள முடியும்;
ஆயத்த பணிகள்
இதனால் தடை நீக்கத்துக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழு வீச்சில் செயல்பட வைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் இந்தியாவிலும் தடையை நீக்க கோரி பிரசாரங்களையும் லாபிகளையும் மேற்கொள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் நகர்வுகள்
இந்தியாவில் தடை நீக்கப்படுவதன் மூலம் தனி தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகள் வலிமையடையும் என்பதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்பார்ப்பு என கூறப்படுகிறது.