"பிரபாகரன் சாமி" சிலையுடன் கோயில்... இரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு!
நாகப்பட்டிணம்: வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கட்டப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கோயிலை தமிழக அரசு இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ஆம் தேதி வாயர்வீட்டு வம்சாவழி வகையறாக்கள் மற்றும் கிராமத்தினரால் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.
கோயிலின் தெற்கு பகுதியில் தங்களது காவல்தெய்வத்திற்கு இரண்டு குதிரைகளை காவலாக சிமெண்ட் சிலையாக வடிவமைத்திருந்தனர். அதில் ஒன்று சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர்.
"தன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்து தாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம். இதனால் எங்களது குலதெய்வமாகி இஷ்ட தெய்வத்துடன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிரபாகரன் சிலையை வைத்து வழிபடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கிராமத்தினர் சொல்லி வந்தனர்.
நாகை காவல்துறை உத்தரவு
உளவுத்துறையினரால் இந்த தகவல் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாகை காவல்துறையினர் நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு வந்து பிரபாகரனின் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு
அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பின்னர் காவல்துறையினரின் அதிரடியால் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் தலைமறைவு
தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள ஊர் பெரியவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லை. காவல்துறையினருக்கு பயந்துபோய் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இரவோடு இரவாக இடிப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கோயிலை இரவோடு இரவாக தமிழக அரசு அடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.