அடேங்கப்பா? விடுதலைப் புலிகளின் அரசியல் படை பிரிவு நாங்கதான்.. நாம் தமிழர் நிர்வாகி சர்ச்சை ட்வீட்
சென்னை: நாம் தமிழர் கட்சி என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் படை பிரிவு என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் தலைவராக கூறிக் கொள்ளும் @SunandhaTS பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்தனர். இனப்படுகொலை பேரழிவுடன் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் தமிழ்நாட்டில் சினிமா இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் என்கிற இயக்கமும் அதுவே அரசியல் கட்சியாகவும் மாறியது.

நாம் தமிழர் என்ற பெயர், தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனர் நடத்திய கட்சியினுடையது. அதனைப் பெற்ற சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையே தமது அரசியல் கட்சியின் கொடியாக உருமாற்றினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் போல மஞ்சள், சிவப்பு நிறத்தை முதன்மைப்படுத்தினார். தமிழீழ விடுதலைதான் இனத்தின் இலக்கு என்பது சீமானின் முழக்கம்.
அதேநேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால் தனித் தமிழ்நாடு உள்ளிட்டவை இல்லாத பேச்சளவில் மட்டுமேயான தமிழ்த் தேசிய அரசியலை கொள்கையாகவும் முன்வைத்து வருகிறார் சீமான். பிரிவினைவாத அரசியலை வாக்கு வங்கி அரசியல் கட்சி பேச முடியாது என்பதால் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உருவப்படம், விடுதலைப் புலிகளின் தளபதிகளின் உருவப் படங்கள் ஆகியவற்றை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுவதும் இல்லை. இது பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை தலைவர் என தம்மை ட்விட்டரில் அறிவித்துக் கொண்டிருக்கும் Sunandha Thamaraiselvan @SunandhaTS இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தமிழனத்தலைவரை தாங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் படைப்பிரிவான நாம் தமிழர் கட்சி உறவுகள்! என அறிவித்துள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சி என்பது, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு என அதில் தெரிவித்துள்ளார். இது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் படுகொலை செய்தோம் என சீமானும் அவரது கட்சியினரும் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications