சந்திர கிரகணம் : ஏப்ரல் 4ல் 5 மணிநேரம் சாமியை பார்க்க முடியாது
சென்னை: இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி சந்திரகிரகணம் நிகழவுள்ளதை முன்னிட்டு 5 மணிநேரம் கோவில் நடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனிக்கோயிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மேல் வின்ச் மற்றும் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில்களில் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் சந்திரகிரகணத்தை முன்னிட்டு தரிசனம், அபிஷேகங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம்
வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது. பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படுகிறது.
சிறப்பு பூஜைகள்
பின்னர் இரவு 7.15 மணிக்கு சந்திரகிரகணம் முடிந்த பின்பு சன்னதியில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு இராக்காலபூஜை நடைபெறுகிறது. அது சமயம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தீர்த்தக்குட அபிஷேகங்கள் நடைபெறாது.
ரோப்கார் நிறுத்தம்
சந்திரகிரகணத்தை முன்னிட்டு வின்ச் மற்றும் ரோப்கார் இயக்கம் காலை 9.30 மணியோடு நிறுத்தப்படும். படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாக காலை 9.30 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் நடை மூடல்
சந்திரகிரகணத்தின் போது பழனி மலைக்கோயில் மட்டுமன்றி பிற உபகோயில்களான அடிவாரம் திருஆவினன்குடி கோயில், அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், ஒட்டன்சத்திரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயில், பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்களிலும் பிற்பகல் 2.45க்கு சன்னதி மூடப்பட்டு இரவு 7.15 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் என திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications