சென்னை அருகே கடலில் "ஆடி" வந்த கார்... திருடர்கள் போட்டுச் சென்றதாக தகவல்
சென்னை: சென்னை அருகே கோவளம் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆடி கார் கடல் நீரில் மிதந்து வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று காரை மீட்டனர். இந்தக் காரை திருடர்கள் திருடிச் சென்று கடலில் போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
கோவளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் ஒரு கார் அலையில் சிக்கி மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக மீனவர்கள் 20 பேர் மீன் பிடிக்க பயன்படுத்தும் கயிறுகளை பயன்படுத்தி காரை கரைக்கு இழுத்து வர முயற்சித்தனர்.
கடல் சீற்றமாக இருந்ததாலும், சூறைக்காற்று வீசியதாலும் காரை கரைக்கு இழுத்து வருவது சிரமமாக இருந்தது. மேலும் பாறை இடுக்கிலும் அது சிக்கிக் கொண்டது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். பொக்லைன் மூலம் கார் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
அது பதிவு எண் கூட இன்னும் வழங்கப்படாத புத்தம் புதிய ஆடி கார். கார் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது ஒரு மணிபர்ஸ், செல்போன் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், மேடவாக்கத்தை அடுத்துள்ள கெளரிவாக்கத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாருடன் வந்தார். அதில் அவர், ‘நான் கல்குவாரி நடத்தி வருகிறேன். என்னிடம் எனது அத்தை மகன் ஜோஸ்வா (27) என்பவர் கார் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று எனது புதிய சொகுசு காரை கொடுத்து தொழில் சம்பந்தமாக ஒருவரை பார்ப்பதற்காக அனுப்பி வைத்தேன்.
அவர் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தபோது முட்டுக்காடு அருகே காரை சாவியோடு ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை கடத்திச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜோஸ்வா எனக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், கார் கோவளம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்ததும் இங்கு வந்தேன்' என்று கூறினார்.
வில்லியம் சொன்னது போல நடந்ததா என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.