கருணாநிதியின் மகன்... சொன்னதை செய்வேன்... சவால் விடும் மு.க. அழகிரி
மதுரை: நான் கருணாநிதியின் மகன். சொன்னதையே செய்வேன் என்று மு.க. அழகிரி சவால் விடுத்துள்ளார்.
கருணாநிதி உடல்நல குறைவால் கடந்த மாதம் 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி திடீரென அக்கட்சியில் சேர முடிவு செய்து பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
இதையடுத்து அவரை மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ள முடியாது என்று திமுக சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன்னுடன் இருப்பதாக கூறிய அழகிரி வரும் 5-ஆம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து கொண்டு பேரணி செல்வேன் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் பேசிய அழகிரி , தன்னை திமுகவில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று 10-ஆவது நாளாக மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்திய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் கருணாநிதியின் மகன். நான் சொன்னதையே செய்வேன். வரும் 5-ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை அழைத்து கொண்டு பேரணி வருவேன் என்றார்.
மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியும் அழைப்பு ஏதும் வந்த பாடில்லையே என்ற செய்தியாளர் கேள்விக்கு,
அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என மு.க. அழகிரி பதிலளித்தார்.