விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு தேவை- திருவாரூர் கலெக்டரிடம் கருணாநிதி சார்பில் ஸ்டாலின் மனு!
திருவாரூர்: திருவாரூரில் மழை நீரால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
திருவாரூரையடுத்த இளவன்கார்குடி கிராமத்தில் நீரில் மூழ்கிய வயல்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் திருவாரூர் கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை:
அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர், ஆட்சியர் மதிவாணனிடம் கோரிக்கை மனு ஒன்றினை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் எம்எல்ஏவான திமுக தலைவர் கலைஞர் சார்பில் கோரிக்கை மனு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
சுற்றுச் சுவர் சீர் செய்யும் பணி:
கமலாலய திருக்குளம் மேல்கரை, வடகரை இரண்டு மதில் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மற்ற இரண்டு பக்க மதில் சுற்று சுவர்களும் இடியும் தருவாயில் உள்ள காரணத்தினால் சுற்றுச்சுவர் சீர் செய்யும் பணியினை உடனடியாக செய்து தர வேண்டும்.
கருணாநிதி தொகுதியைப் புறக்கணிக்கக் கூடாது:
கருணாநிதி தொகுதி என்பதால் இந்தத் தொகுதியை மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கக் கூடாது. சுற்றுச்சுவரை சீரமைக்க திமுக தலைவர் தனது தொகுதி நிதியிலிருந்து பணம் ஒதுக்க முன்வந்தும் கூட அதை அரசு ஏற்கவில்லை. தாங்களே செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரை செய்யவில்லை.
விவசாயிகளுக்கு நிவாரணம்:
விவசாயிகளின் குறுவை நெல் அறுவடை செய்ய முடியாமல், மழை நீரில் நெல் மூழ்கி முளைத்த காரணத்தினால், பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டும்.
நாசமடையும் பயிர்கள்:
விவசாயிகளின் சம்பா, தாளடி நடவு நட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழிகிய காரணங்களால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாராத காரணத்தினால் மழைநீர் வடியாமல் பயிர்கள் நாசமடைவதால் பாசன, வடிகால் வாய்க்கால்களை தூர்வாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலைகள்:
அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி போக்குவரத்து வாகனங்களும், பொதுமக்களும் இடையூறாக இருப்பதால் சாலைகளை சரி செய்ய வேண்டும்.
தொற்று நோய் அபாயம்:
மழைநீர் தேங்கி உள்ள காரணத்தினால் தொற்று நோய் பரவ அபாயம் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் பரவாமல் தடுக்க மருத்துவ வசதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.