தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார்.
மதுரை: விரைவில் ஆட்சி கலையும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது பலிக்காது; தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில் மதுரை மாநகரம் தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே மதுரை மாநகரத்தில் சுத்தம், சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டியது, அனைவரின் கடமையாகும்.
தமிழக அரசை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது. தமிழக அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தி உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது. அப்படி இருக்கும் போது மு.க.ஸ்டாலினால் எப்படி முடியும்?
அரசை கவிழ்ப்பேன் என்று நகைச்சுவை நடிகர் போல் ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications