அறிக்கைப் போருக்கு மத்தியில் அழைப்பிதழுடன் வந்த ஸ்டாலின்.. 'அன்பு'டன் வரவேற்ற 'மணி'!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், தருமபுரி தொகுதி எம்.பியுமான டாக்டர். அன்புமணியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர், தனது சகோதரர் மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்து அன்புமணியை அழைத்தார்
ஜூன் 8ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் அறிவுரைப்படி, அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வளவு பேரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார், தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின். நேற்று வைகோவை சந்தித்து அழைப்பு விடுத்த அவர் இன்று டாக்டர் அன்புமணியை தியாகராயநகரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தார்.
கடந்த ஒருமாதகாலமாகவே ஸ்டாலின் மீது அறிக்கை போர் தொடுத்து வருகிறார் அன்புமணி, இந்த நிலையில் ஸ்டாலின் - அன்புமணி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஆரோக்கியமான சந்திப்பை அரசியல் ஆக்கவேண்டாம் என்று கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறிய அவர், நேற்று நான் மாநாட்டில் பேசியதிலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது என்றார்.
நாங்கள் எந்த கூட்டணியையும் நம்பவில்லை. யாருடனும் கூட்டணி சேரமாட்டோம் என்று நேற்றைய தினம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அன்புமணி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.