"பினாமி முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே நா காக்க": மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
சென்னை: தமிழக பினாமி முதல்வரான பன்னீர் செல்வம் நா காப்பது மிகவும் முக்கியம். சட்டசபையைக் கூட்டச் சொல்வதே தவறா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
"பினாமி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில், கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன்.

அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன, மாநிலத்திற்குப் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார், பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்களில் நடைபெறும் குளிர்காலச் சட்டமன்றக் கூட்டத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை நீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
சட்டப்பேரவை
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதால், அவர்களது உயிர்களைக் காப்பாற்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வுபோன்ற பிரச்சினைகளையும் விவாதிக்க வேண்டியிருப்பதால் சட்டப் பேரவையினைக் கூட்ட வேண்டுமென்று கோரிக்கையைத் தெரிவித்திருந்தேன்.
"பினாமி" பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கிற போது முக்கியமான எதிர்க்கட்சி, தமிழகச் சட்டப் பேரவையைக் கூட்டச் சொல்லிக் கேட்டுக் கொள்கிற அளவுக்கா இங்கே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது? ஜனநாயக ஆட்சியில் தானே சட்டமன்றம், பேரவைக் கூட்டம், அங்கே ஆரோக்கியமான விவாதம், பதில் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறலாம்.
அதையெல்லாம் தற்போது அதிமுகவின் தனி நபர் சர்வாதிகாரத்தில், பினாமி ஆட்சியிலே எதிர்பார்க்கலாமா என்ற வகையில் தான் பன்னீர் செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும், சட்டசபையைக் கூட்ட ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை என்றும் மிகுந்த ஆணவத்தோடும், ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிறதென்ற தலைக்கனத்தோடும் அறிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications