கொடநாடு எஸ்டேட்
ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டுமென்றும், விவாதிக்க வேண்டுமென்றும் இதற்கு முன்பு எத்தனையோ முறை எதிர்க் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. சட்டப் பேரவை ஒன்றும் "கொடநாடு எஸ்டேட்" மற்றும் சிறுதாவூர் அரண்மனை போல தனி நபர் சொத்தல்ல. அ.தி.மு.க. வுக்கு மட்டும் பட்டா பாத்தியமுள்ள இடமுமல்ல. அது தமிழக மக்களின் பொதுச் சொத்து; பேரவையில் அங்கம் வகித்திடும் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து.
மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையில் தற்போது இலங்கையிலே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை யெல்லாம் விளக்கியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி முடிவுற்று, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த ஐந்து மீனவர் களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையிலே கடந்த மூன்றாண்டு காலமாக வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கும், வழக்கிற்கும் அரசு நிதியைக் கொடுத்தார்களே தவிர, இந்த மூன்றாண்டு காலத்தில் அவர்களை விடுவிக்க முடிந்ததா? அரசுப் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டால், அவர்கள் திரும்பி வந்து விடுவார்களா? அந்த ஐந்து மீனவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள் அல்லவா? அதைப் பற்றியெல்லாம் விவாதிக்கச் சட்டப் பேரவையைக் கூட்டுங்கள்; இந்தப் பிரச்சினையில் தமிழகமே ஒன்றிணைந்து ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வாய்ப்பு ஏற்படும் என்றால், சட்டசபையைக் கூட்ட ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை என்று அறிக்கை விடுவதா ஒரு முதலமைச்சருக்கான கண்ணியம்?
சட்டப் பேரவையைக் கூட்டுமாறு கேட்டுக் கொள்வது, பன்னீர்செல்வத்தின் "அம்மா" அகராதிப்படி குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கின்ற செயலா? தி.மு.கழகத்தின் சட்டப் பேரவை கழகக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு உரிமை இல்லையா?
ஏன் பழைய முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்காளானதால் முதல்வரே மாறியுள்ள நிலையில், புதிய அமைச்சரவையும் அமைந்ததற்குப் பிறகு சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டுமா? வேண்டாமா? மேலும் பன்னீர்செல்வம், ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருத்தல் வேண்டுமென்றும் பேரவைச் செயலாளர் குறித்துக் கொடுத்தபடி பேரவை விதியைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆறு மாதங்களுக்குள் கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம். அதைத் தான் நானும் கேட்டேன். அப்படிக் கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லை என்று சொல்வது, என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் குரலை நெரிப்பதற்குச் சமம்; மக்களாட்சியின் மாண்பையே காலில் போட்டு மிதித்திடும்செயல்.