எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி!
சென்னை: நாடு முழுவதும் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நேரடியாக இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காப்பதாக நடிகையும், மருத்துவருமான நிர்வாகி ஷர்மிளா விமர்சித்துள்ளார். எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ஷர்மிளா, இதுதான் கொள்கை எதிரியை எதிர்ப்பதா என்றும் விமர்சித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 60 சதவிகித சிஎன்ஜி இந்தியா இறக்குமதியை நம்பியே இருக்கிறது. ஏற்கனவே ஹோட்டல்களில் சிலிண்டர் இல்லாமல் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்வதிலும் பல்வேறு சிக்கல் உருவாகி இருக்கிறது. இதனால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார்.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா உடனான ஒப்பந்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது. தற்போது மீண்டும் ரஷ்யாவையே நாடி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதான் சரியான நேரம் என்று ரஷ்யாவும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறது. இதனால் இன்னும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் உயர்வும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இதுவரை ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடவில்லை. இத்தனைக்கும் ஆண்டுக்கு 6 எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதுதொடர்பாக நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில், 24 மணி நேரமாகிவிட்டது.. நாடு முழுவதும் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விஜய் எதுவும் சொன்னாரா? இதனால் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் விஜய்யும், விஜியும் பாதிக்கப்படுறாங்களே? ஓ.. கொள்கை எதிரியா. ஓகே ஓகே! என்று பதிவிட்டுள்ளார்.
ஷர்மிளாவின் பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதோடு, அந்த உணவுகளை சார்ந்திருக்கும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூட விஜய் அறிக்கை வெளியிடாமல் அமைதி காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications