Chennai: ஒரே போன் காலில் ஒரு கோடியை இழந்த சென்னை முதியவர்.. ”டிஜிட்டல் அரெஸ்ட்” விபூதி அடித்த கும்பல்
சென்னை: சென்னை நொளம்பூர் பகுதியில் முதியவர் ஒருவருக்கு போன் செய்து, நாங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் பேசுகிறோம், "உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இருக்கிறோம்" என்று கூறி ஒரு கும்பல் ரூ.1 கோடி அபேஸ் செய்துள்ளது. இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
காலத்திற்கு தகுந்தாற்போல் மோசடி சம்பவங்களும் நவீனமாகி வருகிறது. திருட்டு, கொள்ளை, மோசடி, நூதன மோசடி என பணம் பறிக்க தற்போது புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். மோசடிகளில் சிக்காமல் இருக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கினாலும், ஒருசிலர் தெரியாமல் இதில் சிக்கிக்கொண்டு பல லட்சம், கோடிகளில் பணத்தை இழந்துவிட்டு கண்ணீர்விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

செல்போனில் வந்த அழைப்பு
அப்படித்தான் சென்னையில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறி முதியவர் ஒருவரை செல்போனில் கால் செய்து மிரட்டி ரூ.1 கோடியை பறித்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தற்போது இந்த மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்ததோடு, இது போன்ற இணைய வழி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, 1930 என்ற எண்ணை அழைத்தோ புகார் செய்யலாம் என்று சென்னை மாநகர போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை நொளம்பூர் பகுதியில் வசித்து வரும் முதியவர் சத்தியமூர்த்தி (வயது 60). சம்பவத்தன்று சத்தியமூர்த்தியை செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது எதிர் முனையில் பேசியவர்கள் தங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர். இதனால் சற்று பயந்து பேசிய முதியவர் என்ன சார் என்று கேட்டு இருக்கிறார்.
ரூ.1 கோடியே 7 ஆயிரம் அபேஸ்
அப்போது அவர்கள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டு இருக்கீங்கள். இதற்காக உங்களை டிஜிட்டல் கைது செய்து இருக்கிறோம். இதனால் பயந்து போன அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயிருக்கிறார். உடனே அவர்கள் செல்போனில் சிக்னல் சேட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய கோரியும், அதில், நிலையான வைப்பு தொகை கணக்கை முடித்து அந்த பணத்தை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் என்றதும் பயந்துபோன முதியவர் செல்போனில் பேசியவர்கள் உண்மையிலேயே மத்திய அரசு அதிகாரிகள் தான் என்று நம்பியிருக்கிறார். இதுமட்டும் இன்றி அவர்கள் சொன்னபடியே அனைத்தையும் செய்து இருக்கிறார். இதில் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடியே 7 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள் மீண்டும் பணம் கேட்டு அவருக்கு போன் செய்து மிரட்டி இருக்கிறார்கள்.
ஹரித்துவார், ராஜஸ்தானில் வங்கி கணக்கு
அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் சந்தேகம் அடைந்த சத்தியமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் முதியவர் அனுப்பிய பணம் பல இடைநிலை வங்கி கணக்குகள் மூலம் ஹரித்துவாரில் உள்ள ஆக்சிஸ் வங்கி கணக்கு, ராஜஸ்தானில் உள்ள ஹெச்.டி.எப்.சி. வங்கி கணக்கிற்கு மாற்றப் பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளின் மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த மோசடியில் சென்னை மண்ணடியை சேர்ந்த அஜரூதீன் என்பவர் பிடிபட்டார். இவர் தான் மோசடி பணத்தை 40க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக பெற்று இருப்பது தெரியவந்தது. பர்மா பஜாரில் மின்னணு பொருட்கள் விற்பனை மற்றும் செல்போன் வியாபாரம் செய்துகொண்டே இந்த வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த வாலிபர் கைது
இப்படி பணப் பரிவர்த்தனை செய்ததற்காக அவருக்கு கமிஷனும் வாங்கியிருக்கிறார். தனது தொடர்புகளின் மூலம் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை ஏற்பாடு செய்து காசோலைகள் மூலம் பணத்தை எடுப்பதற்கும் உதவியுள்ளார். மேலும் இவர் இந்த மோசடி செயலியில் ரூ.5 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம் வரை உள்ள பரிவர்த்தனைக்கு சுமார் 3 சதவீதம் கமிஷனாக ரூ.15 ஆயிரம் பெற்று இருக்கிறார்.
இப்படியே இவர் மொத்தமாக ரூ.1.20 லட்சம் கமிஷன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அஜரூதீனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு பின்னால் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் முதியவர் ஒருவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி ரூ.1 கோடி பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications