நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி
செங்கல்பட்டு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் தங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரித்தது திமுக தான் என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாமகவுக்கு 37 வருடங்களாகியும் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினராக என்னை தேர்வு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள், பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது கட்சிக்கு 37 வயதாகிறது. [Anbumani Ramadoss]

பாமகவுக்கு என்ன இல்லை
நமக்கு என்ன இல்லை. இருக்கின்ற கட்சிகளில் மிகப்பெரிய கொள்கை, செயல்திட்டங்கள், இளைஞர்கள், தொலைநோக்கு பார்வை ஆகியவை நம்மிடம் தான் இருக்கிறது. அத்தனை சாதனைகளை நாம் செய்துள்ளோம். ஒரு மாநிலங்களவை எம்பிக்கு கூட மற்றவர்களை நம்பி இருக்கிறோமே. இதுவே நம்மிடம் 34 எம்எல்ஏக்கள் இருந்திருந்தால் அவர்களே என்னை தேர்வு செய்திருப்பார்கள்.
அதை விட வேறு சந்தோஷம் இருக்க முடியுமா. நமக்கு அங்கீகாரமே இல்லை. மற்றவர்களை தான் சார்ந்துள்ளோம். நமக்கு பிறகு தொடங்கிய கட்சிகள், மக்களுக்கு எதுவுமே செய்யாத கட்சிகளுக்கு கூட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு நிறைய வேலைப்பளு இருக்கிறது. மனதிலும் நிறைய பளு இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக நடப்பதை சொல்ல முடியவில்லை.
திமுகதான் காரணம்
என் மனைவி, மகளுக்கு அது தெரியும். இவ்வளவு நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து, குழப்பி இந்த நிலைக்கு கொண்டு வந்தது கேடு கெட்ட திமுக தான். அதனால் தான் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிறோம். என் மனதில் அவ்வளவு வலி இருக்கிறது. இந்த தேர்தலில் களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி திமுகவை வீழ்த்த வேண்டும்.
இந்த கட்சி தான் என்னுடைய குடும்பம். கட்சியினர் மட்டும் தான் என் குடும்பம். இந்தக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது எல்லாமே திமுக மட்டும் தான். நம் கோபத்தை எல்லாம் தேர்தல் களத்தில் வெளிப்படுத்த வேண்டும். திமுக ஒரு தீய சக்தி" என்றார்.அன்புமணியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications