முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!
மதுரை: தென் மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மூலமாக திமுக மிகப்பெரிய திட்டம் ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பாமக தரப்பில் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் மூலமாக தீவிரமாக கொண்டு செல்ல திமுக தயாராகி வருகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக திமுக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மைக்ரோ லெவலில் திமுக பணியாற்ற திட்டமிட்டிருக்கிறது. அதேபோல் தென் மாவட்டங்களில் கடந்த முறை வென்ற தொகுதிகளை விடவும் இம்முறை கூடுதலாக வெல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது.

இதன் காரணமாகவே தென் மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பை சபரீசன் கையில் எடுத்துள்ளார். அதேபோல் முக்குலத்தோர் வாக்குகளை கைப்பற்றவே ஓபிஎஸ் தரப்பையும் திமுக பக்கம் கொண்டு வந்துள்ளனர். அதேபோல் அதிமுக - பாமக இடையிலான கூட்டணி அமைந்துள்ள நிலையில், மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.
அதிமுக ஆட்சியின் கடைசி தருணத்தில் வன்னியர் சமூகத்திற்கு 11.5% இடஒதுக்கீடு அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இம்முறை தேர்தல் வாக்குறுதியிலும் அதனை வெளியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் மூலமாக வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்து வரும் செயலை பிரச்சாரமாக்க திமுக திட்டமிட்டுள்ளது.
சேலம், கோவை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் வன்னியர்கள் இருக்கின்றனர். கடந்த முறை கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவால் பெரிதாக வெல்ல முடியவில்லை. இந்த முறை அது கைக் கூடும் தூரத்தில் இருப்பதால், தென் மாவட்டங்களில் பெற்ற வெற்றியையை தக்க வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார்.
இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. அதேபோல் ஓபிஎஸ் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ள சூழலில், அவரது மகனும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications