பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE
விருதுநகர்: தேர்தல் பரபரப்பின் உச்சத்தை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கும் தேமுதிக தான் எதிர்பார்க்கும் தொகுதிகளில் விருதுநகர் தொகுதியையும் லிஸ்டில் சேர்த்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, யாருக்கு எத்தனை தொகுதி? யாருக்கு எந்த தொகுதி என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட வருகின்றனர். டிசம்பர் மாதம் முதலே கூட்டணி கணக்குகளை தொடங்கிய தமிழக அரசியல் கட்சிகளில் தேமுதிக எந்த பக்கம் சாயும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

தேமுதிகவும் டெல்லி வரை சென்று பாஜக மேலிடத்தில் தனக்கான செல்வாக்கை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது. மேலும், கோவை ஈஷா மையத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் தேமுதிக தலைமை நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தேமுதிக அதிமுக பக்கம் சாயும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென தேமுதிக அறிவாலயத்தில் ஐக்கியமானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஏற்கனவே அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருந்த நிலையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்காத அதிருப்தியால் தான் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது என்பது பலராலும் பேசப்பட்ட ஒரு விஷயம். புலி வருது புலி வருது என்ற கதையாக தேமுதிக எந்த பக்கம் சாயும் என அனைவரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் ஒரு வழியாக தேமுதிக திமுக கூட்டணியில் ஐக்கியம் ஆகிவிட்டது
கலைஞர் பாணியில் சொல்லப்போனால் பழம் நழுவி பாலில் விழுந்து விட்ட நிலையில் திமுக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிகவிற்கு திமுக தலைமை ஏழு இடங்களை ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விருதுநகர் விஜய பிரபாகரனுக்கும், தேமுதிகவிற்கும் ஏற்கனவே நன்கு அறிம்கமான தொகுதி என்பதால், விஜய பிரபாகரனின் வெற்றி எளிதாகும் என தேமுதிக தலைமை கணக்கு போடுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் 3 லட்சத்து 85 ஆயிரத்து 286. அதே நேரம் புதுமுகமான விஜய பிரபாகரன் பெற்ற வாக்குகள் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877. அதாவது காங்கிரசின் மிகப் பழமையான, விருதுநகர் தொகுதியில் நன்கறிந்த முகமான மாணிக்கம் தாகூரை விட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருந்தார் விஜய பிரபாகரன்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் சிதறி இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் இழந்த வாக்குகளை ஓரளவிற்கு ஒன்று சேர்க்க முடியும் என தேமுதிக நம்புகிறது. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் கண்டால் எளிதில் வெற்றி பெறலாம் எனவும் தேமுதிக தலைமை கணக்கு போடுகிறது. அதனால் விருதுநகர் தொகுதியை பெற்று விட வேண்டும் என தேமுதிக முனைப்பு காட்டி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை நன்கு அறிந்த முகமான அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியை குறி வைப்பதாலும், திமுகவின் சிட்டிங் எம்எல்ஏவுமான அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே திருச்சுழி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து உள்ள நிலையில் விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்க திமுகவிற்கு எந்த தடையும் இருக்காது என்பதும் தேமுதிகவின் கணக்கு. விஜயகாந்த் மகன் என்னும் அடையாளத்தோடு ஏற்கனவே 2024 நாடாளுமன்ற தொகுதி முழுவதும் நன்கறியப்பட்ட விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதி கிடைத்தால் களம் எளிதாக இருக்கும் எனவும் தேமுதிக நம்புகிறது.
திமுக கூட்டணி முகாமில் தனக்கு கிடைத்த இடத்தை அங்கீகாரமாக மாற்ற தேமுதிக கிடைக்கும் தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என துல்லிய கணக்கு போடுகாது தேமுதிக. விஜயபிரபாகரன் தேமுதிகவின் அடுத்த அடையாளமாக இருப்பதால் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது தேமுதிக. எனவே விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கு வெற்றிக்கனியை பறிப்பதற்கான ஆயத்தங்களோடு களம் காண காத்திருக்றது தேமுதிக.












Click it and Unblock the Notifications