ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் - ஸ்டாலின்
திருச்சி: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம், கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29ஆம் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் மிகவும் தடுமாறி வருகின்றனர். இதனையடுத்து, கே.என்.ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.என்.ராமஜெயம், கொலை செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிபிசிஐடி விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லை.

மேலும், தனது கணவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் காரணங்களுக்காக வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்திவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால், இந்த மனு விசாரணைக்கு வரும் போதெல்லாம், குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம், விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என கூறி காவல்துறையினர் கால அவகாசம் கேட்டு வந்தனர். ஆனால் இம்முறை நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி, ஆரம்பத்திலிருந்தே தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருவது பற்றி தலைவர் கருணாநிதி தான் முடிவு செய்வார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications