தமிழர் வீரத்தை நாடெங்கும் அறிய அயராமல் போராடும் இளைஞர்-மாணவர் நோக்கம் வெல்லும்: ஸ்டாலின்
தமிழர் வீரத்தை நாடறிய போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நோக்கம் வெல்லும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக, அலங்காநல்லூரில் நேற்று தொடங்கிய போராட்டம் இரவு முழுக்க நடைபெற்றது. இதனை அடுத்து, போலீசார் சுமார் 300 பேரை தடியடி நடத்தி கைது செய்தனர். இதனைக் கண்டித்து சென்னை, திருச்சி, விழுப்புரம், சேலம், புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனையடுத்து, தமிழர் வீரத்தை நாடெங்கும் தமிழர் வீரத்தை நாடெங்கும் அறிய அயராமல் போராடும் இளைஞர்-மாணவர் நோக்கம் வெல்லும் என்று மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்களில் ஒருவன்
உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்
"கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம், கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை" எனப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாடிய வரிகளைப் போல, தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திக் காட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள், மாணவர்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அணிவகுத்து நிற்கின்றனர். தலைநகரமாம் சென்னையின் மெரினா கடற்கரை வரை அவர்களின் ஆர்ப்பாட்ட எழுச்சியைக் காண முடிகிறது.

தமிழக அரசின் சர்வாதிகாரம்
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கும் நிலையில், உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழக அரசோ, இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கொடூரமான முறையிலே தடியடி தாக்குதல் நடத்தி, அராஜகமான முறையிலே கைது செய்து, சர்வாதிகாரத்தனமான முறையிலே உணவு-குடிநீர் கூட கிடைக்காதபடி செய்து வருகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சட்ட அனுமதியுடன் நடத்தப்பட்டு, தமிழகத்தின் பாரம்பரியப் பெருமை காக்கப்பட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஜனவரி 3ந் தேதி அலங்காநல்லூரில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்ட ஆர்ப்பாட்டம் தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. கழகத்தின் சார்பிலான அந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியை உருவாக்கியது. அதுபோலவே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழகத்தின் சார்பில் ஜனவரி 12ந் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

தொடர் போராட்டம்
இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பல இடங்களிலும் நடந்து வருகின்றன. அவற்றுக்கு தி.மு.கழகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அதுபோலவே அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கைது செய்ததை கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் இன்று (17-01-2017) போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாநிலக் கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு எனது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

போலீஸ் பாதுகாப்பு
அதுமட்டுமல்ல, தமிழர்களின் வீரவிளையாட்டை நடத்த வலியுறுத்தி களமிறங்கிய மாணவர்களை, இளைஞர்களைக் கொடூரமான முறையிலே கைது செய்திருப்பதைக் கண்டித்தும் அவர்களை உடனே விடுவிக்க கோரியும் தமிழக காவல்துறைத் தலைவரான டி.ஜி.பி அவர்களிடம் மனுவை கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று அளித்தேன். கைதான இளைஞர்கள் சிலரை விடுவிப்பதாக செய்திகள் வெளியாகின. எனினும், அனைத்து இளைஞர்களையும் விடுதலை செய்வதுடன், இனி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்றும், மாணவர்கள்-இளைஞர்களின் அறவழிப் போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் இந்த நேரத்தில் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இளைஞர்கள் எழுச்சி
பொங்கல் விழாவும் விடுமுறையும் நிறைவு பெற்றதால் போராட்டம் ஒடுங்கிவிடும் என்ற மத்திய-மாநில அரசுகளின் நினைப்பைத் தவிடுபொடியாக்கி, அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த எழுச்சி தெரிகிறது. இளைஞர்களின் மகத்தான சக்தியின் முன்னால் எந்த அடக்குமுறையும் எடுபடாது என்பதை நிரூபிக்கும் வகையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனைக் காணும் போது, இந்தி ஆதிக்கத்தினால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோது 1965ம் ஆண்டு தமிழகத்தில் எழுந்த கிளர்ச்சியையே நினைவூட்டுகிறது. அன்றைய இளைஞர்களின் எழுச்சி எப்படி தமிழ்மொழியைப் பாதுகாத்ததோ, அதுபோல இன்றைய இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சி, தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவசரச் சட்டம்
எழுச்சிமிக்க இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வரும் இளைஞர்களின் உணர்ச்சியை மத்திய-மாநில அரசுகள் உணரவேண்டும். ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விளையாட்டை சட்டப்பூர்வமாக நடத்துகின்ற வகையில், மத்திய அரசு இந்த தை மாதம் முடிவதற்குள் நீதிமன்றத்தில் உரிய அனுமதியைப் பெற்றுத் தரவேண்டும் எனவும், அதில் தாமதம் ஏற்படுமென்றால் உடனடியாக அவசர சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

வாழ்த்துகள்
தமிழர்களின் வீரத்தை நாடெங்கும் உள்ளோர் அறிந்துகொள்ளும் வகையில் அயராமல் போராடும் இளைஞர்கள்-மாணவர்களின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications