பாஜக அரசை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி
திரு.யஷ்வந்த் சின்ஹா மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரும், பொருளாதார நிலவரங்கள் குறித்து அலசுபவருமான டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி அவர்கள், "ஏற்றுமதியும், இறக்குமதியும் தொடர்ந்துக் குறைந்து கொண்டே வருகிறது. இல்லத்தரசிகளின் சேமிப்பும் குறைந்து விட்டது. மிகப்பெரிய பொருளாதார சீரழிவை நாடு சந்தித்துள்ளது. வங்கிகளும், தொழிற்சாலைகளும் மூடப்படும் என்பதை எல்லாம் விளக்கி, பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு முன்கூட்டியே 16 பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறேன்", என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
மேலும், "பொருளாதார பேரிடர் உருவாகப் போகிறது", என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆகவே, எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விட மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களே முன்வைத்து, பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் பொருளாதாரம் எப்படி வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே! பா.ஜ.க. ஆட்சியை, அக்கட்சியைச் சார்ந்தவர்களே விமர்சித்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை முழுமையாக அறியும்போது அதிர்ச்சியும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதுதொடர்பாக மேலும் சில பொருளாதார வல்லுநர்கள் தரும் தகவல்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

2014 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில், உலக அளவிலான ஜி.டி.பி. உயர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவில் அது வேகமெடுத்தது. ரூபாய் நோட்டின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி என்பது இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பெருமிதப்பட்ட பிரதமர் மோடி அவர்கள், "இந்திய மக்களுக்கு நல்லநாள் வந்து கொண்டிருக்கிறது. அச்சா தின்", என்றார். அந்த நாள் வந்ததா, வருமா என்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் பிரதமரால் உத்திரவாதம் தர முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் முழுமையான பெரும்பான்மையுடன் மத்தியில் அமைந்த அரசு என்ற பெருமையைப் பெற்ற நிலையிலும், மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றாமல், அதனை வீணடித்த சாதனையைத்தான் செய்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒருபங்கு அளவில்தான் உலகளாவிய கச்சா எண்ணெய்யின் விலை இருக்கிறது.
ஆனால், பெட்ரோல் - டீசல் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. வாகன எரிபொருளான பெட்ரோலும், டீசலும் விலை உயர்ந்தால், மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி. அதுதான் நடந்துள்ளது. தனியார் முதலீடுகளும் தகர்ந்துவிட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி பலமடங்கு சரிந்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன் இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோகின்றன. வணிகம் சார்ந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. வங்கிகளில் உரிய கடனுதவிகள் வழங்கப்படவில்லை. கடனுதவி இல்லாத நிலையில் வணிகம் மேம்படாது. வணிகம் மேம்படாவிட்டால் வேலைவாய்ப்புகள் பெருகாது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு போன்ற அபாயகரமான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் உடைந்து நொறுங்குகிறது.
ஜி.டி.பி. என்கிற மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகோலைக் காட்டி, ஆரம்பத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ.க. அரசும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கணக்கும் கூட, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக செயற்கையாக அமைந்ததே தவிர, இந்த ஆட்சியின் சாதனை அல்ல. பெட்ரோலிய பொருட்கள் மீது பலவித வரிகளை விதித்து, வணிக வளர்ச்சியை சிதைத்து, பொருளாதாரத்தை சீரழித்ததுதான் மோடி அரசின் வேதனை மிகுந்த சாதனை. கச்சா எண்ணெய்யின் விலை, சர்வதேச சந்தையில் மீண்டும் உயருமானால், இந்திய பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சம் அனைத்துத் தரப்பையும் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications