மோடி அரசை பாராட்டிய அறிவு ஜீவிகளே விமர்சிக்கிறார்கள்- ஸ்டாலின்
பா.ஜ.க.வில் உள்ள சில அறிவு ஜீவிகள் "பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகச்சிறந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை", என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி, மோடி தலைமையிலான அரசுக்கு முட்டுக் கொடுத்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட அறிவுஜீவிகள் எல்லாமே இப்போது, "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது", என்று மனம் திருந்திய மைந்தர்களாக கருத்துச் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது. ஆதார், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற தாக்குதல்களில் இருந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்பாகவே, அடுத்த 'சுனாமி தாக்குதலாக' சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனும் ஜி.எஸ்.டி.யும் நடு இரவிலேயே நாடாளுமன்றத்தைக் கூட்டி அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களுக்கு, "முறையாக திட்டமிடல் செய்யும்வரை ஜி.எஸ்.டி. அமல்படுத்தவதை தள்ளி வையுங்கள்", என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தார்கள். அதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பாதிப்பு என்றும், வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்று, அனைத்து எதிர்கட்சிகளுமே எச்சரித்தோம். ஆனால், 'தனி மெஜாரிட்டி' இருக்கிறது என்ற அதிகார போதையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்து விட்டது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. பாதிப்புகள் குறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார பாதிப்புகள் கடுமையானவை.
அந்தக் கட்டுரையில், "இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனியார் முதலீடுகள் குறைந்து விட்டன. தொழில் உற்பத்தி சீர்குலைந்துவிட்டது. விவசாயம் பேரிடரில் மாட்டிக் கொண்டுள்ளது. கட்டுமானத் தொழில் நிலைகுலைந்து விட்டது. ஏற்றுமதி குறைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சீர் செய்யமுடியாத பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறது. பல லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டார்கள். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. வழக்கமான அளவுகோளின்படி பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டால், இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாகக் குறைந்து விட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பண பரிவர்த்தனை முடங்கி விட்டது", என்றெல்லாம் அவர் கூறிவிட்டு, "ஏழ்மையை நெருங்கிய வட்டத்தில் இருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
ஆனால் அவரது நிதியமைச்சரோ அனைத்து இந்தியர்களும் ஏழ்மையை நெருங்கிய வட்டத்தில் இருந்து பாருங்கள் என்பதற்காக கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்", என்று நெற்றியில் அடித்தார் போல் மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதார சீரழிவுகளைப் பட்டியலிட்டிருக்கிறார். சுயவிமர்சனம் என்று சொல்வதுபோல சொந்தக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே பா.ஜ.க.வின் மூன்றாண்டு கால அரசின் பொருளாதாரச் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சரிசெய்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கட்டுரை எழுதிய கட்சிக்காரரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.