நாட்டு மக்களை முச்சந்தியில் விட்டதுதான் மத்திய அரசின் 3 ஆண்டு கால சாதனை.... ஸ்டாலின் பொளேர்
நாட்டு மக்களை முச்சந்தியில் விட்டதுதான் மத்திய அரசின் 3 ஆண்டு கால சாதனை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : நாட்டு மக்களை முச்சந்தியில் விட்டதுதான் மத்திய அரசின் 3 ஆண்டில் நடந்தது என்று மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : வண்ண வண்ண மத்தாப்புகளால் வாணவேடிக்கை காட்டுவது போல, வாக்குறுதிகளை அள்ளி வீசி, பெரும் பொருட்செலவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இடைவிடாத பிரசாரம் செய்து, தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆட்சி செய்யும் வகையில் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட்டால் மத்திய ஆட்சியில் இருப்பவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களைச் சார்ந்தவர்களே வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருப்பதில் இருந்து, மத்திய ஆட்சியின் மூன்றாண்டு கால செயல்பாடுகள் சாதனையா - வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது.
"வளர்ச்சி" என்ற முழக்கத்தை 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முன்வைத்து, வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டை "வீழ்ச்சி" என்ற பாதைக்குக் கொண்டு போய்விட்டது. "அடித்தட்டு மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும், அனைத்துச் செயல்பாடுகளுக்கும் 'ஆதார் எண்' கட்டாயமாகக் கொடுக்க வேண்டும், ரொக்கமாக பணம் பரிவர்த்தனை செய்வதை கைவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்", என்று கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியுள்ள கெடுபிடியான நடவடிக்கைகள் இன்றைக்கு அனைத்துத் தரப்பையும் பாதித்து விட்டது.
"ஆதார் கார்டுகளை கட்டாயமாக்கக்கூடாது", என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. ஆனால், அதையும் மீறி, 'எதிலும் ஆதார் மயம்', என்று மக்களை இந்த மூன்று வருட காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது இந்த அரசு. ஆதார் கார்டுகளின் நம்பகத்தன்மை, தனிமனித பாதுகாப்பு குறித்த நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, சர்வாதிகாரமாக செயல்படுகிறது மத்திய அரசு.
அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதற்குச் சரியான எடுத்துக்காட்டாக, 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரம் அமைந்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, இரவோடு இரவாக செல்லாதவை என்று அறிவித்து, இந்திய நாட்டின் 90 சதவீத மக்களுக்கு தாங்க முடியாத துயரத்தை மாதக்கணக்கில் கொடுத்த அரசுதான் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக, வங்கிகளின் முன்பு வரிசையில் நின்றே உயிரைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். 'நீண்ட வரிசையில் நின்று பா.ஜ.க.விற்கு வாக்களித்த ஒரே பாவத்திற்காக, அதேபோன்று நீண்ட வரிசையில் நின்றதால் மாண்ட சோகம்', மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டது. தாங்கள் உழைத்து சம்பாதித்து சேமித்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கி வாசலிலும், ஏ.டி.எம்.கள் முன்பாகவும் நீண்ட வரிசையில் நின்றவர்களில் ஒருவராக நீங்களும் இருந்திருப்பீர்கள். கூலி வேலைக்கு செல்வோரும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் தங்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமல், வங்கிகளின் முன்பு கொடுமையான வகையில் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க நின்றார்கள்.
உச்சநீதிமன்றமே தலையிட்டு சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தபோது கூட, "அதெல்லாம் முடியாது", என்று ஆணவத்துடன் மறுத்தது இந்த பா.ஜ.க. அரசு. முன்னால் பிரதமரும், சிறந்த பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், "பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு இமாலய தவறு", என்று பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டபோது, பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்களும், தலைவர்களும் அவரை எள்ளி நகையாடினார்கள்.