ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவையொட்டி சேற்றையும் மாடுகளுக்கு ஊற்றும் கழனிதண்னீரையும் கலந்து உடம்பில் பூசி, பக்தர்களை விளக்குமாறு மற்றும் செருப்பால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது. மக்கள் எப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக இப்படி ஒரு திருவிழாவை நடத்துவதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரில் சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில்களின் உற்சவவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி நடைபெற்று வந்தது.

திருவிழாவில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முகத்தில் வர்ணப் பொடிகளை பூசி வேடமிட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு கோவில் முன்பாக அமர்ந்தனர்.
அதனைத்தொடர்ந்து மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து செருப்பு மற்றும் துடைப்பத்தில் தொட்டு ஒவ்வொருவராக மாற்றி மாற்றி தலையில் அடித்தும், கால்களால் தலையில் உதைத்தும், செருப்பு மாலை அணிவித்தும் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து சேற்றில் குதித்து ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக் கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் கோவில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடனை முடித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது இது போன்ற நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறோம். உடலில் சேறு பூசிக் கொள்வதால் கோடை காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும். மேலும் துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழி ஏற்படும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் அம்மன் பூஞ்சோலை சென்றடைதலுடன் திருவிழா முடிவுற்றது.












Click it and Unblock the Notifications