மத்திய அமைச்சரவையில் மதிமுகவுக்கு இடம்? - துரை வைகோ பட்டென சொன்ன பதில்!
சென்னை: திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறிய துரை வைகோ, மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் கேட்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
திருச்சி லோக்சபா தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, சென்னை சென்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நேரில் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “இந்த மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கப்போகிறது. மதவாத, பாசிச அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இந்தியாவின் மாதிரியாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் அவரிடம் வாழ்த்துகளையும் பெற்றேன். கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு மேலாக தேர்தல் பரப்புரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்றாண்டு கால சாதனைகளைச் சொல்லும் போது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்ததை தெரிந்து கொண்டோம்.
ஜனநாயகத்திற்காக மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதே வேளையில் மத அரசியல் புரிந்து மக்களைப் பிளவுபடுத்தும் சாதி மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. வாக்குக் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி சென்ற போது, மக்கள் முகங்களில் தெரிந்த மலர்ச்சியே எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று சொல்லும் வகையில் இருந்தது. ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் கலைஞரின் 101வது பிறந்த நாளுக்கான பரிசாக அமையும் என் நம்புகிறேன்" என்றார்.
மத்திய அமைச்சர்?: இந்தியா கூட்டணியின் சார்பில் நீங்கள் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் கேட்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த துரை வைகோ, “மத்திய அமைச்சர் பதவியைப் பற்றி எல்லாம் நான் நினைக்கவே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications