திண்டுக்கல் தோல் ஏற்றுமதி முடங்கியதற்கு மோடி அரசுதான் காரணம்- ஸ்டாலின்
அதன் மோசமான விளைவுகளை இந்தியா முழுவதும் காண்கிறோம். உங்களில் ஒருவனாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்கும் போது நானும் அதனை உணர்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் 'டாலர் நகரம்' எனப்படும் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நசிவடைந்ததும், திண்டுக்கல்லில் தோல் ஏற்றுமதி வணிகம் முடங்கியதும், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிர்வாகத்திறன் எப்படி இருக்கிறது என்பதற்கு வேதனைக்குரிய சாட்சிகளாக இருக்கின்றன.
'வளர்ச்சியும் ஏற்படவில்லை, ஊழலும் ஒழியவில்லை, கறுப்புப் பணமும் ஒழியவில்லை, ஊழல் புரிந்தோரை தண்டிக்கும் லோக்பாலும் இதுவரை அமைக்கப்படவில்லை, ஏழ்மையும் நீங்கவில்லை'. அதற்கெல்லாம் மாறாக, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் ஏழை எளியவர்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியும் காணவில்லை. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாயும் வரவில்லை. 'வளர்ச்சி' என்று கூறிவிட்டு தங்களின் 'காவிக் கொள்கை'யைப் புகுத்தி, 'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் இந்தியாவில், மதத்தின் பெயரால் மாட்டிறைச்சி உண்பதைத் தடுத்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களிடம் துவேஷத்தை எழுப்பி, நாட்டுப் பற்று மிக்கவர்களைக் கூட, "தேசவிரோதிகள்", என்று சித்தரிக்கும் போக்கினால், உழைக்கும் மக்களை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.
ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை உடனடியாக கைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.