புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி
புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் மது அருந்திய மது பிரியர்களை போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர் . மது அருந்திய குற்றத்திற்காக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஐஜி ஷாலினி சிங் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி முழுவதும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது காவல்துறை அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து வருகிறது. அதன்படி வார இறுதி நாளான நேற்று புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

அப்படி வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரி மது பிரியர்களும் பொது இடங்களில் மது அருந்துகிறார்களா? என கண்காணிக்க ஒதியன்சாலை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுப்பையா சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி,ஆம்பூர்சாலை, கடற்கரை பகுதிகள்,பழைய துறைமுக மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பல்வேறு பகுதிகளின் மது அருந்தியவர்களை விரட்டி அடித்தனர். மேலும் போலீசாரை கண்டதும் மது பிரியர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் அவர்களை சினிமா பாணியில் போலீசார் விடாமல் துரத்தி பிடித்து கைது செய்து பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி ஒதியன்சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மது அருந்தியதற்காக ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நாளில் மது அருந்திய குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் ஏராளமான இளைஞர்கள் மது அருந்துவதற்காகவே வரும் சூழலில், காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை மது பிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட பார்கள் அல்லது உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, பொது இடங்களில் மது அருந்தினால் ₹5,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை (அல்லது இரண்டும்) விதிக்கப்படலாம்.
புதுச்சேரி அரசு சமீப காலங்களாக பொது இடங்களில் (குறிப்பாக கடற்கரைகளில்) மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக்கியமாக தடைசெய்யப்பட்ட இடங்கள்:
- புதுச்சேரி ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால், ராக் பீச், பாண்டிச்சேரி மெரினா, பேரடைஸ் பீச் போன்ற அனைத்து கடற்கரைப் பகுதிகள்.
- சுற்றுலாத் தலங்கள் மற்றும் பூங்காக்கள்.
- சாலைகள், தெருக்கள் மற்றும் வாகனங்களை பொது வழியில் நிறுத்தி அதற்குள் அமர்ந்து குடிப்பவர்கள் மீது இப்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications