"சுடுநீரிலே விழுந்த பூனை... சுகவாசி... ஜெ. குறித்து கருணாநிதி காட்டம்
சென்னை: "சுடுநீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்" என்பது போல எப்போதும் திமுகவையே பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக தாக்கியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்திருந்தார்.
தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்து கருணாநிதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கருணாநிதியின் அறிக்கை விவரம்:

சுடுநீரில் விழுந்த பூனை
"சுடுநீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்" என்பது ஒரு பழமொழி. அது போல முதலமைச்சர் என்ன தான் கொடைநாடு எஸ்டேட்டில் போய்த் தங்கினாலும் பல வகைப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டுள்ள அவருடைய நினைப்பெல்லாம் திமுக கழகத்தின் மீதும் அதன் தலைவனாக இருக்கின்ற என்மீதும் தான் போலும்.

சென்ட்ரல் குண்டுவெடிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும் பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா அறிக்கை:
ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.

என்னுடைய செயல்பாடு:
அந்த அறிக்கையில் 1998 ஆம் ஆண்டு கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது முதலமைச்சர் என்ற முறையில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.

தேவையான நடவடிக்கை:
14.2.1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

உடனே விரைந்தேன்:
மறுநாள் 15.2.1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன். என்னுடன் த.மா.கா தலைவராக இருந்த மூப்பனாரும் வந்தார்.

அதிகாரிகளும் வந்தனர்:
மேலும் அன்றைய தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், சிறப்புத் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, காவல்துறைத் தலைமை இயக்குநர் எப்.சி.சர்மா மற்றும் உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். ஆகிய அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றேன்.

காயமடைந்தோர்க்கு ஆறுதல்:
கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

நிதி உதவி அளித்தேன்:
அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.

பேச்சு மட்டும் போதுமா? :
விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா "கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்" என்று கோரினார். மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது "தி.மு.க ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக் கூட உத்தரவாதமில்லை" என்றார்.

கேள்வி கேட்பது எளிது:
மானாமதுரையில் பேசும்போது "குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா?" என்று கேட்டார்.

அப்படி பேசியவர்:
1998ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது இப்படியெல்லாம் பேசியவர் தான் ஜெயலலிதா. தற்போது நான் அப்படியெல்லாம் கூடப் பேசவில்லை.

முறையான விசாரணை:
என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால் இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா எனவே காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

தவறு என்கிறார்:
இதைத்தான் தவறு என்று கூறி முதலமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

முதல்வருக்கு மறதி:
நான் வெளியிட்ட அதே அறிக்கையில் தமிழகத்தில் நிலவிடும் கடும் வறட்சி , குடிநீர்த் தட்டுப்பாடு, தாய்மார்கள் காலிக் குடங்களோடு நடத்திடும் மறியல் போராட்டங்கள் , கடுமையான மின்வெட்டு, ஆம்னி பேருந்துகளில் கடுமையான கட்டண உயர்வு சட்டம், ஒழுங்குப் பிரச்னை, காய்ந்து போன நெற்பயிர்கள்என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய முதலமைச்சர் எங்கே என்று கேட்டிருந்தேனே.
முதலமைச்சர் ஜெயலலிதா வசதியாக இவற்றையெல்லாம் மறந்து விட்டாரே? ஏன்?

அவர் ஓதவில்லையா:
நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால் 98ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கோவை குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா?

பதில் என்ன?:
முதலமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா? நான் அறிக்கை விடுத்த அதே நாளில் "தினமலர்" நாளேடு "எச்சரிக்கை விடுத்த உளவுத் துறை! கோட்டை விட்ட தமிழக போலீஸ்" என்ற தலைப்பில் தமிழக உளவு மற்றும் பாதுகாப்பு சிறப்பு போலீஸ் சார்பில் அனைத்துப் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட ரகசிய எச்சரிக்கைக் கடிதத்தை அப்படியே "பிளாக்" செய்து செய்தி வெளியிட்டிருக்கிறதே அந்தச் செய்திக்கு முதலமைச்சரின் பதில் என்ன?

சென்னை ஏன் வரவில்லை?:
கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன் முதலமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவமனையிலே சிகிச்சை பெறுபவர்களையெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே அவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?

சுகவாசி நானா? :
நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே எதையும் தெரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களை யெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்!

கேட்பது முறையா?:
சொல்வது யார் தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் தளம் அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்து வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட அனுமதிக்காமல் பிரசாரம் செய்து விட்டு இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு நேராக கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications