சசிகலா கணவர் நடராஜன் இப்போ எப்படியிருக்கார் தெரியுமா?
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தேறியுள்ளதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி திடீரென்று அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் முகமது ரேலா, மருத்துவ சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் கே.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். நடராஜனுக்கு, கல்லீரல் செயல்திறன் குறைந்ததை தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாச கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் மற்றும் இதர தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படாததால், அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞன் கார்த்திக் மூளைச்சாவடைந்த நிலையில் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அவருடைய கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி இரவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கல்லீரலும், சிறுநீரகமும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு, தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து கணவர் நடராஜனை சந்தித்தார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை முடிந்து நாளையுடன் 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் நிலையில் நடராஜனுக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நடராஜன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு அவர் சாதாரணமாக சுவாசிக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என்றும் குளோபல் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.