இலை அவங்க கிட்ட இருந்துட்டுப் போகட்டும்... ஆனால் பொதுச் செயலாளர் சசிகலாதான்.. நடராஜன் அதிரடி
அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றுமே சசிகலா தான் இது தான் மக்களின் தீர்ப்பு என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றுமே சசிகலா தான் என்பது மக்கள் முடிவு செய்தது என்று புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் கூறியுள்ளார்.
புதிய பார்வை இதழின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம. நடராஜன் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனியார் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஞாயிறன்று ஒலிபரப்பாகியுள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது : ஆர்கே நகர் தேர்தல் களத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் பொதுவாகவே மக்கள் ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் ஆனால் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்காளித்தாலே நல்லது நடக்கும் என்று நினைப்பார்கள். மக்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பார்கள் என்பது என்னுடைய அனுமானம், ஆனால் அவர்களுக்கு வெற்றியா என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும்.
ஓ.பிஎஸ், ஈபிஎஸ்க்கு சவால்
எம்ஜிஆருக்குப் பிறகு கஷ்டப்பட்டு இரட்டை இலை சின்னத்தை பெற்றெடுத்தது நாங்கள் தான். எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காதவர்கள் இன்று நான் தான் எல்லாம் என்கிறார்கள். நான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், அவர்களால் என்னை எதிர்கொள்ள முடியுமா. நான் அவர்களுக்கு கேட்கும் கேள்வியே நீங்கள் திடீரென முளைத்து விஸ்தரித்துள்ளீர்கள். யார் காலிலும் விழுந்து எதையும் பெறவில்லை என்று சொல்லும் போதே அவர் காலில் விழும் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. மக்கள் ஒன்றும் இளித்த வாய்கள் அல்ல.
யார் இவர்கள்?
கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து நான் உத்தரவை போடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், என்னுடைய வார்த்தைகள் உத்தரவாக இருந்தது. அதை தெரியாதவர்கள் வந்து உட்கார்ந்து கொண்டு எல்லாம் என்னுடையது என்கிறார்கள். இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
அதிகாரத்தை பயன்படுத்தி
ஒரு தலைவர் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார், அதை வைத்து ஆட்சி அமைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைவைத்துக் கொண்டு மற்றவர்களின் அதிகாரத்தில் தலையிடுகிறார். தன்னுடைய அதிகாரத்தை வைத்துக் கொண்டு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தில் தலையிடுகிறார்.
தொடக்கம் முதலே டெல்லியுடன் உறவு
அவர் தேர்ந்தெடுத்ததால் தான் பழனிசாமி முதல்வரானார். ஆனால் அந்த சமயத்தில் இருந்தே சதி நடந்திருக்கிறது என்பது தெரிகிறது இவர்களுக்கு டெல்லியின் உறவு அப்போதே இருந்திருக்கிறது.
சசிகலா தான் எப்போதும் பொதுச் செயலாளர்
எப்போது வந்தாலும் சசிகலா தான் கட்சியின் பொதுச்செயலாளர், அவர் கட்சியில் உள்ள ஏகோபித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்க்ததிற்கு போய்விட்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டத்தை கூட்டிக் கொண்டிருக்கலாமே ஒழிய வேறு எதுவும் செய்ய முடியாது. அதிமுக என்பது சாமானியர்களை வைத்து எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அமைப்பு, கட்சியை ஓராண்டில் போட்டு உடைத்துவிட்டார்கள்.
யாராலும் மாற்ற முடியாது
முன்பு போல சுதந்திரம் இருக்கிறதா, எல்லோருமே ஒரு சங்கடத்தில் தான் உள்ளார்கள். மக்கள் தான் இறுதி எஜமானர்கள் அவர்கள் கையில் தான் எல்லாமே இருக்கிறது. இதே போன்று சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதும் மக்களின் முடிவு இதை யாராலும் மாற்ற முடியாது என்றும் நடராஜன் கூறியுள்ளார்.