மாட்டுத் தொழுவமாக மாறிய அரசுப் பள்ளி... கண்டு கொள்ளாத அதிகாரிகள்.. கலக்கத்தில் மாணவர்கள்
நெல்லை: நெல்லை அருகே சிறார் பள்ளியில் மாட்டை கட்டி தொழுவமாக மாற்றி வி்ட்டதால் சிறுவர்கள் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
நெல்லை அருகே மானூர் யூனியன் பள்ளிக்கோட்டையில் ஊராட்சி ஓன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கு்ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது ஈராசிரியர் பள்ளியாகும். தலைமை ஆ்சிரியையும், உதவி ஆசிரியர் ஒருவரும் உள்ளனர்.
கிராமத்து பள்ளி என்பதால் கல்வி துறை அதிகாரிகளும், ஊராட்சி ஓன்றிய அதிகாரிகளும் இந்த பள்ளியை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் சிலர் ஆடு, மாடுகளை கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாணம் உள்ளிட்ட கழிவுகள் வகுப்பறை, வராண்டா உள்ளிட்ட இடங்களில் சிதறி கிடக்கிறது.
இரவு நேரங்களில் பள்ளிகள் அருகே ஆடுகளை அடைத்து வைப்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்கள் உட்கார வழியின்றி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஊர் தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. பள்ளியை ஆசிரியர்களே சுத்தம் செய்ய வைத்தாலும் நிலைமை மாறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாலை பள்ளி வாளகத்தில் திரண்டனர். தகவல் அறிந்த உதவி தொடக்க கல்வி அதிகாரி முத்துபிள்ளை, கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியை உஷா, கால்நடைகளை இஙகு கட்டி வருவதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் பாடம் படிக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து யூனியன் அதிகாரிகளிடமும், கல்வி துறை உயர் அதிகாரிகளிடமும் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications