வேந்தர் மூவிஸ் மதனைக் கண்டுபிடிக்க... போலீசாருக்கு மேலும் 3 வாரம் அவகாசம்!
சென்னை: மதன் வழக்கில் காவல்துறைக்கு மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசி சென்று கங்கையில் சமாதி அடையப் போவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன் கடந்த மே 28 ம் தேதி காணாமல் போனார்.
காணாமல் போன மதன் மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகின. மேலும் மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு மதனின் மனைவி, தாயார் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காணாமல் போன மதனைக் கண்டுபிடித்து நேரில் ஆஜர் படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். மதன் வழக்கில் ராதா கிருஷ்ணன் அவ்வப்போது தனது விசாரணை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்து வருகிறார்.
கடந்த ஜூன் 23ம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராதா கிருஷ்ணன் 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டுமென்று கேட்க, நீதிபதிகள் 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
2 வாரங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் காணாமல் போன மதனைக் கண்டுபிடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் மதன் வழக்கில், மேலும் 3 வார கால அவகாசத்தை காவல்துறைக்கு வழங்கி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications