நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரிய ஸ்டாலின் வழக்கு.. 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதை செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சட்டசபையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.
இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக..
சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ஷல் சீருடையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சட்டசபைக்குள் நுழைந்து எம்எல்ஏக்களை வெளியேற்றினர். இதில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

எதிர்த்து வழக்கு…
இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதே போன்று பாமக வழக்கறிஞர் பாலுவும் இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜமாலுதின் மனு
அப்போது, சட்டசபை விதிகளின்படி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வெளிப்படையாகத்தான் வாக்கெடுப்பை நடத்த முடியும். மறைமுக ஓட்டெடுப்பு நடத்த சட்டசபை விதிகளில் இடமில்லை என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பதில் மனு தாக்கல் செய்தார்.

உண்மைகளை மறைக்க..
அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது பதிவான வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டும், இதுவரை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அதனை தாக்கல் செய்யவில்லை. வீடியோ பதிவை தாக்கல் செய்ய காலதாமதம் செய்வதால், அதில் உள்ள உண்மைகளை மறைக்க அவர்கள் முயற்சிக்கலாம் என்று கூறினார்.

அவசியமில்லை..
இதற்கு பதில் அளித்த சட்டசபை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ காட்சிகளை ஐகோர்ட்டின் உத்தரவின்படி ஐகோர்ட்டின் பதிவுத்துறையில் தாக்கல் செய்து விட்டோம் என்று கூறினார்.

தணிக்கை செய்த காட்சிகள்
அதற்கு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அந்த வீடியோ பதிவை எங்களுக்கு சட்டசபை செயலாளர் தரவில்லை என்றும், இப்போது தான் ஐகோர்ட்டு பதிவுத் துறையில் தாக்கல் செய்துள்ளதாக கூறுகிறார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், அவையில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை தணிக்கை செய்து, சாதகமான காட்சிகளை மட்டும் சில டி.வி. சேனல்களுக்கு சட்டசபை செயலாளர் வழங்கியதையும் சண்முகசுந்தரம் பதிவு செய்தார்.

21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
விசாரணைக்கு பின்னர், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை மனுதாரர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கே.பாலு உள்ளிட்டோருக்கு இன்றே வழங்க வேண்டும் என்றும் சட்டசபை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவிற்கு மனுதாரர்கள் தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications