மதுரையில் அ.தி.மு.க.வினர் போராட்டம்- ஹைகோர்ட் கண்டனம்! இளங்கோவனுக்கும் "கொட்டு"!!
சென்னை: மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் முன்ஜாமீன் கையெழுத்திட காவல்நிலையத்துக்கு இளங்கோவன் ஊர்வலமாக செல்லக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மதுவிலக்கு அமல்படுத்த கோரிய போராட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டு சில அவதூறு கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே காமராஜர் அரங்கத்தின் உதவியாளர் வளர்மதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காமராஜர் அரங்கம் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இதனால் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது இளங்கோவனும், நாராயணனும் 15 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திடவேண்டும் என்பது நிபந்தனை.
மதுரையில்...
இதையடுத்து இளங்கோவன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் உத்தரவாதம் அளித்தார். பின்னர் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக நேற்று இரவு மதுரைக்கு இளங்கோவன் புறப்பட்டு சென்றார்.
அதிமுகவினர் போராட்டம்
இந்த தகவல் தெரிந்து கொண்ட அ.தி.மு.க.வினர் இளங்கோவன் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தல்லாகுளம் காவல்நிலையத்துக்கு இளங்கோவன் வரும்போதும் விளக்கமாறுடன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ஹைகோர்ட்டில் முறையீடு
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், உயர்நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் இளங்கோவன் மதுரைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
கண்டனம்
இதையடுத்து நீதிபதி வைத்தியநாதன், அ.தி.மு.க.வினர் நடத்தும் போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படிதான் மதுரையில் இளங்கோவன் தங்கியிருந்து கையெழுத்திடுகிறார் என்று போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினருக்கு தெரியாதா? இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது. தனிநபர் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றார்.
ஊர்வலமாக செல்கிறார்
அத்துடன் அரசு வழக்கறிஞர், மனுதாரர் வழக்கறிஞர் ஆகியோர் மதுரையில் என்ன நடக்கிறது? என்ற விவரங்களை கேட்டு தெரியப்படுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இளங்கோவனுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி அளித்தார்.
இதை ஏற்று அரசுத் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், முன் ஜாமீன் கையெழுத்திட இளங்கோவன் 11 வாகனங்களில் ஊர்வலமாக செல்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதை நிராகரித்த இளங்கோவன் தரப்பு, போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தெரிவித்தது.
அட்வைஸ்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், முன் ஜாமீன் கையெழுத்திட இளங்கோவன் ஊர்வலமாக செல்லக் கூடாது; அவர் 2 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்; அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.