வருமான வரி வழக்கு: ஜெயலலிதா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு
சென்னை: ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 1-ஆம் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992-93ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் அக்டோபர் 1-ம் தேதி அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, புதன்கிழமை மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமான வரி வழக்கின் விசாரணைக்காக ஜெயலலிதா அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக தேவையில்லை. ஆனால், நிலுவையில் உள்ள சமரச மனுவை 6 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications