உள்ளாட்சி இடைத் தேர்தலுக்குத் தடை இல்லை, நடத்தலாம்... உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கோவையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கார்த்திகேயன். இவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 6ம் தேதி ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை அன்று மாலையே திரும்பப் பெற்றுக் கொண்டது.
பிறகு, மீண்டும் அதே செப்டம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று புதிய அறிவிக்கையை வெளியிட்டது. இதில் உள்நோக்கம் உள்ளது, கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படாமல், சட்டங்களை பின்பற்றாமலும் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் போதிய அவகாசம் தரப்பட்டுள்ளதாகவும், முறைப்படியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும் விளக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான முதன்மை பெஞ்ச் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.