மாலை முரசு ஆசிரியர் வழக்கு: தயாநிதி மாறனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மாலை முரசு நாளிதழ் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலை முரசு நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான எஸ்.என். செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், கடந்த ஆண்டு மாலைமுரசு நாளிதழில் வெளியான கேலிச்சித்திரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளதாக செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் வரும் பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாநிதி மாறன் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.