தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் கூடாது- ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
மறு உத்தரவு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் 18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை : எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடியும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது சபாநாயகர் கட்சிக் காரர் போல செயல்பட்டு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று மட்டுமே ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம், கட்சியை மீறி செயல்படவில்லை என்றும் தினகரன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார்.
இதனையடுத்து சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை வாதாடுவதாகவும், அரசு, சபாநாயகர் மீது எதிர் தரப்பு குற்றம்சாட்டுவதால் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி துரைசாமி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் 18 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது, எந்த காரணத்தைக் கொண்டும் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்து இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் தினகரன் தரப்புக்கு இது இடைக்கால நிம்மதியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் அரசு செயலர், கொறடா, சபாநாயகர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.