ஹெல்மெட் போடாத வக்கீல்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு முறையாக கடைப்பிடிக்கிறதா. வக்கீல்கள் ஹெல்மெட் போடாமல் போவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எத்தனை வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் வக்கீல்கள் பலர் தாங்கள் வக்கீல்கள் என்று கூறி ஹெல்மெட் போடாமல் போவதும், கேட்டால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மேலும் மதுரையில் வக்கீல்கள் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் போன கதையும் நடந்தது. அப்பாவி பொதுமக்களே சட்டத்தை மதித்து ஹெல்மெட் அணிய ஆரம்பித்து விட்ட நிலையில் சட்டத்தை காக்கும் பொறுப்பில் உள்ள வக்கீல்கள் இதுபோல நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கட்டாய ஹெல்மெட் தொடர்பான வழக்கு, இந்த வழக்கில் ஏற்கனவே அதிரடி உத்தரவிட்டிருந்த நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனிடம், கட்டாய ஹெல்மெட் திட்டத்தை தமிழக அரசு எந்த அளவுக்கு அமல்படுத்தி வருகிறது. ஹெல்மெட் போடாமல் போகும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கு அரவிந்த் பாண்டியன், திங்கள்கிழமை இந்த விவரத்தைத் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications