22 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்கும் அல் உம்மா தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய ஹைகோர்ட் பரிந்துரை
அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 22 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
1998-ம் ஆண்டு கோவையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதில் 60 பேர் பலியாகினர்.
இக்குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியதாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் அல் உம்மா இயக்கமும் தடை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 22 ஆண்டுகளாக அல் உம்மா பாட்ஷா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனிடையே பாட்ஷாவை விடுதலை செய்ய கோரி அவரது மகள் முனீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அல் உம்மா தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்யலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பாட்ஷாவை விடுதலை செய்வது குறித்து 6 வாரத்தில் பரிசீலிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.